குஷ்புவுக்கு கோவில் கட்டிய மகா புண்ணிய பூமி தமிழ்நாடு. இதே மண்ணில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒருவர் கோவிலை கட்டியுள்ளார்.
ஆனால், தெலுங்கானாவில் ஒருவர் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சர்வதேச அளவில் அதாவது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கே கோவில் கட்டி விட்டார்.
கோவிலைக் கட்டியவர் பெயர் புஸ்ஸா கிருஷ்ணா (Bussa Krishna) என்பதாகும். இவர் தெலுங்கானாவில் உள்ள ஜங்காவ்ன் அருகே கொன்னே என்ற இடத்தில் கோவில் கட்டி தினசரி வழிபாடும் செய்து வருகிறார்.
தனது வீட்டின் அருகே 6 அடி உயரத்துக்கு டிரம்ப் சிலையை வைத்து கோவிலாக்கியுள்ளார் இந்த புஸ்ஸா கிருஷ்ணா.
தினசரி வழிபாடும் நடக்கிறது. பாலாபிஷேகமும் உண்டு.
இந்த கோவிலை உருவாக்கி முடிக்க ஒரு மாதமானதாம். 20 பேர் சேர்ந்து இந்த சிலையை 2 லட்சம் உருவாக்கினார்களாம். இப்போது எல்லோரும் புஸ்ஸா கிருஷ்ணா வீட்டை டிரம்ப் ஹவுஸ் என்றே செல்லமாக அழைக்கிறார்கள்.
இப்போது இவரது ஆசை என்னவென்றால் இந்தியா வரும் டிரம்ப்பை எப்படியாவது தான் சந்திக்க வேண்டும் என்பதுதானாம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
பிப்ரவரி 24ம் தேதி தனது மனைவி மெலனியாவுடன் இந்தியாவுக்கு வருகிறார் டிரம்ப். 2 நாள் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார். அந்த சமயத்தில் டிரம்ப்பை சந்திக்க புஸ்ஸாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது அவரது கனவு புஸ்ஸாகுமான்னு பொருத்திருந்து பார்ப்போம்.