இந்தூர்:-
சிமெண்ட் கலவையை கொண்டு (Cement Concrete Mixer) செல்லும் வாகனத்தில் கூலித் தொழிலாளர்கள் 18 பேர் மறைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 18 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். ஊரடங்கு காரணமாக இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நோக்கில் சிமெண்ட் கலவையை கொண்டு செல்லும் வாகனத்தின் சிமெண்ட் கலவையை கலக்கச் செய்யும் உருளைக்குள் மறைந்து சென்றுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே 35 கிலோமீட்டர் தொலைவில் பந்த் பிப்லய் (Panth Piplai) கிராமத்தின் அருகே சோதனைச்சாவடியில் வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் சிமெண்ட் கலவையின் இயந்திரத்தின் உருளைக்குள் 18 பேர் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமித் குமார் யாதவ் கூறுகையில்:-
ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் வேலை இழந்து தவித்து வந்த இவர்கள் எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். தற்போது இவர்கள் மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் பரிசோதனைகள் முடிந்ததும் இவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து இந்தூர் மாவட்ட போக்குவரத்து துணை காவல் கண்காணிப்பாளர் உமாகாந்த் சவுத்ரி கூறுகையில்:-
வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்துள்ளோம். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பலர் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடைபயணமாகவும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிள் மூலமாகவும் ன, ரயில்களில் மறைந்தும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.