கில்கிட்-பல்டிஸ்தான்:-
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் (PoK) பழங்கால புத்த பாறை ஓவியங்கள், செதுக்கல்களை அழித்து பாகிஸ்தான் அட்டூழியம் செய்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்கிட்-பால்டிஸ்தான் அருகே சிலாஸ் (Chilas) பகுதியில் கி.பி 800 காலகட்டத்தை சேர்ந்த புத்த பாறை செதுக்கல்கள் அழித்து அதில் பாகிஸ்தானில் தேசியக்கொடி மற்றும் இஸ்லாமிய வாசகங்களை எழுதியுள்ளனர.
இந்த விவகாரம் குறித்து இந்தியா கடும் கவலையை வெளிப்படுத்தியதுடன், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய பிரதேசத்தை காலி செய்யுமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது.
சீன நாட்டின் நிதி உதவியோடு கிளாஸ் பகுதியில் டயமர்-பாஷா (Diamer-Bhasha) என்ற அனைத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இதுபோன்ற வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த அணை திட்டத்தினால் இந்த நினைவுச்சின்னங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்திய புத்த பாரம்பரியத்தை சீர்குலைத்து அழிப்பதை இந்தியா கண்டிப்பதாகவும், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மீட்டெடுப்பதற்கான அணுகலை நாடுகிறது என்றும் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குறிப்பாக காரகோரம் பகுதியில் கிட்டத்தட்ட 50 கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாறை செதுக்கல்கள் காணப்படுகிறது. இவை காந்தார கலை பண்பாட்டை பறைசாற்றுபவை ஆகும்.