இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சுழற்பந்து வீச்சில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் அறிமுகமான அஸ்வின் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக அறிமுகமானார். இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களின் ஒருவராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஐபிஎல் போட்டியின்போது மன்கட் முறையில் ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை அவுட் செய்து பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
கடந்த பத்தாண்டுகளில் அஸ்வின் 564 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் ஓரம் கட்டப்பட்டார். பெரும்பாலான தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை. இருந்தாலும் முதலிடம் பிடித்தது ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.