இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இன்று காலை நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். மக்களுக்கு தங்கள் உயிரை பற்றி கூட கவலைப்படாமல் அயராது உழைத்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி. எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.