ஜோகன்ஸ்பர்க்:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி(52) திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆப்பிரிக்கா கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி நாட்டையும் விட்டு வைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு, ஸ்வாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டது.இங்கு கொரோனா தாக்கத்தால் 6,700 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கொடிய கொரோனாவால் அந்நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினியும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவரது உடல்நிலை சீராகவும், எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தார்.இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி தென் ஆப்பிரிக்காவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கும் அவரது உடல்நிலை சீராக காணப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நேற்றைய தினம் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் துணை பிரதமர் தெம்பா மசுகு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.