பெய்ஜிங்:-
கொரோனா வைரஸ் உலகளவில் பல்லாயிரம் உயிர்களை பலி வாங்குவதோடு உலக நாடுகளுக்கிடையிலான நல்லுறவையும் கெடுத்துவருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் இந்த நாடுதான் என, மற்றொரு நாட்டை சுட்டிக்காட்டி வருகின்றன.
எங்கள் நாட்டில் கொரோனா பரவ இத்தாலிதான் காரணம் என்று ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல, அமெரிக்க ராணுவம்தான் எங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்தது என சீனவும் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ’ பிரைன் சில தினங்களுக்கு முன் சீனாவின் வூஹானில் பரவிய கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைப்பதிலேயே சீனா கவனம் செலுத்தியது.
அதனால், கொரோனாவை எதிர்கொள்வதற்கு உலகம் இரண்டு மாதங்களை செலவிடவேண்டியதாயிற்று என்றார். சீனாவிலும் உலகத்திலும் தற்போது நடக்கும் இந்த பயங்கரத்தை, அந்த இரண்டு மாதங்களுக்குள் பெருமளவில் குறைத்திருக்கலாம், கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றார் தெரிவித்திருந்தார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் ஜாவோ (Lijian Zhao) அமெரிக்கா தான் சீனாவில் கொரோனா பரவ காரணம் என அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து லிஜியன் ஜாவோ தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:-
சில மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் தவறான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் இந்த வைரஸின் மூலத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான பிரச்சினை என்று சீனா எப்போதும் நம்புகிறது மற்றும் அறிவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனை தேவை.
எப்போது அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எந்த மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ராணுவம்தான் வூஹானுக்கு கொரோனாவையே கொண்டு வந்திருக்கவேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே சீனாவில் இதுவரை கொரோனாவால் 1,26,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4630 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.