டெல்லி:-
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.
மத்திய அமைச்சரவையில் தற்போது, 53 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மாலை புதிய அமைச்சரவையில், முன்னாள் முதல்வர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தொழில் புரிவதற்கான தடைகளை களையவும், மத்திய நிதியமைச்சகம் வெளியிடும் அறிவிப்புகளை நிறைவேற்றவும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.