பறக்கும் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளில் உலகின் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. போக்குவரத்து துறையில் பறக்கும் கார் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.பறக்கும் கார் துறையில் சென்னையை சேர்ந்த வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் புது மைல்கல் எட்ட திட்டமிட்டுள்ளது.
தானியங்கி முறையில் செயல்படும் ஹைப்ரிட் பறக்கும் கார் மாடலை வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் அக்டோபர் 5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த மாடல் லண்டனில் நடைபெற இருக்கும் உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் பொருட்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் மாடல் ஆகும்.இரண்டு இருக்கைகளை கொண்டிருக்கும் பறக்கும் கார் இயற்கை எரிவாயு மற்றும் மின்திறன் கொண்டு இயங்குகிறது.
ஹைப்ரிட் பறக்கும் கார் 1100 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார் 1300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது.இந்த ஹைப்ரிட் பறக்கும் கார் 100 கி.மீ வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார், 3 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ச்சியாக 60 நிமிடங்கள் வரை செல்லும்.