80 ஆண்டு பொது வாழ்க்கை, எழுபது ஆண்டுகள் திரைத் துறை, எழுபது ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தினுடைய தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி.
கலைஞர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் அவராக மட்டும்தான் இருக்க முடியும்.13 முறை இந்தச் சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி வாகை சூடிய வெற்றி நாயகர் கலைஞர் கருணாநிதி.
இந்தியாவில் கலைஞர் கருணாநிதி போன்று ஒருவர் இருந்தது கிடையாது. இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது என்று போற்றத்தக்க பெருமையுடையவர் கலைஞர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு 10-02-1969 அன்று முதன்முதலில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் கலைஞர் கருணாநிதி.
அதன்பின்னர் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்மொழியின் மேன்மைக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய மக்களின் கல்வி, அறிவியல், சமூகப் பொருளாதார அரசியல் எழுச்சிக்கும் வழிவகுக்கும் மகத்தான திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கி, ஒட்டுமொத்த இந்தியாவிலும், தமிழ்நாட்டை வளர்ச்சி பெற்ற முன்னணி மாநிலமாக்கியதில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பங்கு ஈடு இணையற்றது.
இன்று நாம் பார்க்கும் நவீன தமிழ்நாடு என்பது கலைஞர் கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு ஆகும். இப்படி தன்னைத் தந்து, இந்தத் தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர்கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.