ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உதயமாகின.
இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த மாதத்துக்குள் ஊரக பகுதிகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் மற்ற பகுதிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் இராம.பிரசன்ன வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் தேர்தல் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.