நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
ஏனெனில், இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
அடுத்த நாள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதனிடையே, கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.