ஸ்பெயின் :
கண்ணீர் விட்டு அழுது கொட்டி தீர்த்தால் மனம் நிம்மதியடையும் என கருதுபவர்கள் உலகில் மிக அதிகம் பேர் உள்ளனர். இவர்களுக்காவே ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிக் நகரில் அழுவதற்கென்று தனி அறை ஏற்படுத்தி உள்ளார்கள்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என பழமொழி உண்டு. அதுபோல் கண்ணீர் விட்டு கதறி அழுதால் கவலை மறைந்து விடும்.
கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களுக்காகவும், துயரைச் சொல்லி அழுது ஆறுதல் அடைய ஆள் இன்றி தவிப்பவர்களுக்காகவும் ஸ்பெயின் நாட்டில் மாட்ரிக் நகரில் தனி அறையை உருவாக்கி உள்ளனர் என்பது சிறப்புக்குரிய விஷயம்.
அழுகையை அடக்க அடக்க மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும்.இதனால் ரத்த கொதிப்பு உள்பட பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கவலை இருந்தால் உடனே கண்ணீர் விட்டு அழ வேண்டும் என மனநல மருத்துவர்கள் கூறுவதுண்டு.
அழுகை அறைக்கு உங்களை வரவேற்கிறோம் என்ற விளம்பர பலகை பாதிக்கப்பட்டவர்களை வரவேற்கிறது இந்த மையம். மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அழுகை அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன. அழுக வேண்டும் என தோன்றும் போது தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்து வருவதோடு பலரும் அழுகை அறைக்கு வந்து அழுது ஆறுதல் பெற்று வருகின்றனர்.