சென்னை மாநகரில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை போதாதென்று அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட்டும் கொடுத்துள்ளது.
இதனிடையே, சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்திருந்தது.
ஆனால் மழை வெள்ளம் பெரிதாக பாதிக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட வேண்டும் என்று உடனே கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், முற்றிலும் மழை நிற்கும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும். ஸ்மார்ட் சிட்டி, மழை நீர் வடிகால் திட்டங்களில் சொல்ல முடியாத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது.
வெள்ள மீட்பு பணிகளுக்கு பின் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போதைய வெள்ள பாதிப்புக்கு கடந்த அதிமுக அரசின் நிர்வாகமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.