மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி. லீலாவதி, இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.
எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி, தனது சித்தப்பா எம்ஜிஆருக்குச் சிறுநீரக தானம் செய்தவர்.
எம்ஜிஆரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனும் தகவல், கேரளாவில் இருந்த எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி, நாளிதழ்கள் மூலம் தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது திருமணமாகியிருந்த லீலாவதி கணவரின் ஒப்புதலுடன் தனது சித்தப்பாவுக்குச் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். லீலாவதிதான் தனக்குச் சிறுநீரக தானம் கொடுத்தார் என முதலில் எம்ஜிஆருக்குத் தெரியாது. அது குறித்த தகவல்கள் அவருக்குச் சொல்லப்படவில்லை என்று கூறப்பட்டது.
பின்னர் உடல்நலம் தேறி திரும்பிய எம்ஜிஆருக்கு, நாளிதழ் ஒன்றின் மூலம் தகவல் தெரிந்தது. வலம்புரி ஜான் எழுதியிருந்த வாழ்த்துரையில் ‘லீலாவதிக்கு நன்றி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் அறிந்ததும் லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்துக் கண்ணீருடன் நன்றி சொன்னார் எம்ஜிஆர். இதை லீலாவதியே பதிவுசெய்திருக்கிறார். குடும்பத்தில் தன்னையும் பிற குழந்தைகளையும் வளர்த்தது எம்ஜிஆர்தான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர் லீலாவதி.
இந்நிலையில், லீலாவதியின் மறைவு எம்ஜிஆர் உறவினர்களிடமும், எம்ஜிஆர் அனுதாபிகளிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.