சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் தரைமட்டமானது.
சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்குச் சொந்தமான 20 ஆண்டுகள் பழமையான 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் டி பிளாக் என்பதில் உள்ள 24 வீடுகள் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருந்ததால் அதில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் காவல்துறை மற்றும் அரசு தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இடிபாடுகளில் யாராவது சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீயணைப்புத்துறையினருடன், அப்பகுதி மக்களும் இணைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். தற்போதுவரை 5 தீயணைப்பு படைகள் இணைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.