விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் அந்தப் படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சி.ஐ.எஸ்.எப். வீரர்களுடன் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்தனர்.
இதையடுத்து நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, நடிகர் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்னை அழைத்து சென்றனர்.