சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி பேசிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று அந்த விழாவில் பேசியிருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகிறது.
ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பலர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதை மறுத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி, இது போலியானது என்றும் ட்வீட் செய்துள்ளார்.
அதில், ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு பாராட்டுக்கள் என்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் கடவுளால் வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்றும் கோவில்கள் விரைவில் மருத்துவமனையாக மாற்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் விஜய்சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது போல் யாரோ ஒரு மர்ம நபர் போட்டோ ஷாப்பில் விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கு போலவே உருவாக்கி இந்த தகவலை பரப்பி விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவுக்கு ஆதரவாக நான் எந்த தகவலையும் வெளியிட வில்லை என்பதை கூறும் விதமாக, இப்படி பரவி வரும் தகவல் முழுக்க முழுக்க பொய் என தெரிவித்துள்ளார்.