திண்டிவனம்:-
கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்கள் திரைத்துறையினர் என ஏராளமாக நிதி உதவி அளித்து வருகிறார்கள். அதேபோல் சிறுவர்களும் தங்களது உண்டியல் சேமிப்பு காசுகளை அளித்து வரும் செய்திகளை நாள்தோறும் படித்து வருகிறோம்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் ஒருவர் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 500 ரூபாய் அளித்துள்ளார்.
ரமேஷ் என்ற அந்த இளைஞர் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் கிராமத்தில் காட்டுப்பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர். அவர்கள் வசிக்கும் குடிசைக்குள் தரையோடு தலை தொடுமளவுக்கு குனிந்துதான் செல்ல வேண்டும்.
இவர்களின் குடிசைகளுக்கு மின்சார வசதி கிடையாது, இவர்களிடம் ரேஷன்கார்ட் கிடையாது, வாக்காளர் அடையாள அட்டை கிடையாது,சாதிச்சான்று கிடையாது.
சுருக்கமா கூறினால் இந்த மண்ணின் பூர்வகுடியா இருந்தாலும் இந்த நாட்டில் பிறந்து வாழ்பவர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
இவரிடம் செகண்ட்சில் வாங்கிய ஒரு ஜியோ பட்டன் ஃபோன் உள்ளது. அதை அருகில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் அவ்வப்போது சார்ஜ் போட்டுக்கொள்வார்கள்.
அதில் தான் உலக நடப்புகளை அவ்வப்போது பார்க்கும் போது கொரோனா பிரச்சினை தொடர்பாகவும், அதற்காக முதல்வர் பொது மக்களிடம் நிதியுதவி கேட்ட செய்தியை பார்த்திருக்கிறார்.
இதையடுத்து உடனடியாக தன்னால் இயன்ற நிதி உதவி எதையேனும் அளிக்க வேண்டும் என்று கருதி 500 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
இது குறித்து கூறிய ரமேஷ்:-
எங்களை விடுங்க சார், கிழங்கு ஏதாச்சும் நோண்டி எடுத்து வந்து சாப்பிடுவோம். கீரை ஏதாச்சும் பறிச்சு குழம்பு வைப்போம், பூ பறிச்சதுக்கு கிடைத்த கூலி சார் சேர்த்து வெச்சிருந்தேன் சார், அதிலிருந்துதான் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 500 அளித்தேன் என்றார் திரு. ரமேஷ். முதலில் 1000 ரூபாய் தான் அளித்துள்ளார், நீங்கள் தரும் 500ரூபாயே போது என்று கூறியுள்ளார். அதையடுத்தே 500 ரூபாய் வழங்கியுள்ளார்.
இவர் கொடுத்திருக்கும் 500 ரூபாய் 5000 கோடிக்கு மேல் மதிப்பு வாய்ந்தது.
அந்த மனசுக்கு ஈடு இணை இல்லை
சல்யூட் ரமேஷ்…