பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா ஹவுஸ்புல் பட இயக்குனரும், நடிகருமான சாஜித்கான் மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்தது அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “நான் 2005ஆம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டார்.
நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்தப் பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால், அவருக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பேசியிருப்பார்கள். ஹிந்தி திரையுலக மாஃபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழி சுமத்தவில்லை. நடந்த உண்மையைக் கூறுகிறேன். என் தந்தை இறந்த துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்துகொண்டார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது ஷெர்லின் சோப்ராவும் குற்றம் சாட்டியுள்ளதால் இந்த விவகாரம் ஹிந்தி திரையுலகில் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.