மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தினை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னரே படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனையடுத்து கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, தற்போது நிறைவுபெற்றுள்ளது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக படக்குழு விரைவில் ஜெய்ப்பூர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால், ஜெய்ப்பூரில் நடைபெறும் படப்பிடிப்பே இறுதிகட்டப் படப்பிடிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.