கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தின் வெற்றி மற்றும் அவரது கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, திரையுலகில் ‘கயல் ஆனந்தி’ என அறியப்படுகிறார். அதனையடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் கயல் அனந்தி.
அறிமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ள கமலி From நடுக்காவேரி நடித்துள்ளார். அப்புண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 19 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கமலி From நடுக்காவேரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட நடிகை கயல் ஆனந்தி பேசுகையில்,'”என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமான படமாகவும் பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமான படமாகவும் இருக்கும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதே மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்தக் கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.