புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணிக்குள் 100% குழப்பம் இல்லை என்றும் முதலமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வந்த பின்னர் துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பாஜக நிர்வாகிகள் இன்று காலை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து வாழ்த்துபெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் சாமிநாதன், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே 100% குழப்பம் இல்லை என்றும், சிலர் குழப்பம் செய்வதாக கூறினார்.
மேலும் முதலமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வந்த பின்னர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த முறை போல் இது மத்திய அரசின் முடிவு என்றார்.
மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்தும் என்றும், 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடைபெறும் என்று கூறினார். தொடரந்து பேசிய அவர், தங்களது தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதால் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தங்கள் கூட்டணி முழு பலத்துடன் உள்ளதாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.