மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் தன்னுடைய பெருங்கனவு என்று இயக்குநர் மணிரத்னம் பலமுறை தெரிவித்து வந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி தேவனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. முழுப்படமாக வெளியாகிறது என்றுதான் இத்தனைநாள் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஸ்வீட் சர்ப்பரைஸாக 2 பாகங்களாக வெளியாகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது புதிய போஸ்டர். போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி தவிர விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.