நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து “ரவுடி பிக்சர்ஸ்” என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்களது தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது.
இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் நயன்தாரா தயாரித்துள்ளார்.இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.
ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் “கூழாங்கல்” என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.
இந்நிலையில் உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் ‘கூழாங்கல்’ படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு கிடைத்த இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்பட்டு வருகிறது.