தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம் பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 96, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான கௌரி கிஷன் தான் படிக்கும் காலத்தில் நான் படித்த ஹிந்து பள்ளியில் இப்படி பட்ட துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், அதில்… “நான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ, மாணவிகளை அசிங்கமாகப் பேசுவது, சாதியை வைத்துப் பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பைக் கிண்டல் செய்வது, நம் குணாதிசயத்தைக் கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ, மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை நான் மட்டுமல்லாது என்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டனர். எனவே அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இன்னமும் அனுபவித்தால் தயங்காமல் தெரிவியுங்கள். உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.