ரஜினி கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் “கவலை வேண்டாம் தலைவா” என்று ட்விட்டர் பதிவு மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் 31-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், “அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் முடிவு ஏமாற்றம் தரும், தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை”, என்று மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டுருந்தார்.
அதனை தொடர்ந்து ரஜினியின் இந்த முடிவை பலவேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “தலைவா பிளீஸ் கவலை வேண்டாம். உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா . உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களை நேசிப்போம்” என்று பகிர்ந்துள்ளார்
இதனிடையே கார்த்திக் சுப்பராஜ் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியபோது “தலைவா வா தலைவா” என்று வரவேற்று டுவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.