இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரிக்கிறார்.
இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், மீண்டும் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் படத்தின் முதல் பாடலான “ஜெய் சுல்தான்” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு சுல்தான் படத்தின் இரண்டாவது பாடலான “யாரையும் இவளோ அழகா” என்ற பாடலை வெளியிட்டது படக்குழு. இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். விவேகா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த பாடல் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இப்பாடலை கார்த்தி மற்றும் சிம்பு ரசிகர்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.