எஸ்.ஜே.சூர்யா நடிகர் அஜித்யை வைத்து வாலி என்ற படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனையடுத்து விஜய் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தார்.
அதனையடுத்து தனது அடுத்த பரிமாணத்தை தொடங்குவதற்காக நியூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர் மெர்சல், ஸ்பைடர், பீட்சா 2 போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளார்.
இந்நிலையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகும் “கடமையை செய்” படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் வெங்கட் ராகவன் சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்கா படத்தினை இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கடமையை செய்” படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார். அவர்களை தொடர்ந்து மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அருண் ராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்று சென்னையில் “கடமையை செய்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது. இதனை விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். படத்தின் பணிகளை முழுவீச்சில் முடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.