இந்தியாவின் சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பயணம் செய்யும் வீரர்களுடன் மைசூருவில் தயாரிக்கப்பட உள்ள இட்லி, எக்ரோல், வெஜ்ரோல் உள்ளிட்ட உணவு வகைகளும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. ககன்யான் விண்வெளிப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்களுக்காக இந்திய உணவுகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. விண்வெளிக்குச் சென்று சாப்பிட இட்லி, காய்கறி புலாவ், வெஜ் ரோல், முட்டை ரோல், உப்மா, பாசிப்பயிறு அல்வா ஆகியன கொண்ட உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பட்டியலை மைசூரில் உள்ள பாதுகாப்பு உணவு ஆய்வு மையம் தயாரித்துள்ளது. விண்வெளி வீரர்களுக்கு உணவு பதார்த்தங்களை சூடு செய்து சாப்பிட ஹீட்டர் கூட விண்வெளி ஏவுகணையில் வைத்து அனுப்பப்பட உள்ளது. மேலும், பால் மற்றும் பழச்சாறுகளும் ககன்யான் வீரர்களுக்காக ஏவுகணையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்கள். இரண்டாவது கட்டமாக வீரர்களுக்கு வரும் ஜனவரி 20ம் தேதி ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி அளிக்கவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. விண்வெளி பயணத்திற்கான விண்கலம் தயாராகி வரும் நிலையில் வீரர்களுக்கான சிறப்பு உணவு வகைகளின் பரிசோதனையும் நடந்து வருகிறது.
விண்வெளி வீரர்களுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ் வகைகளை எடுத்துச் செல்வதற்கான சிறப்பு குடுவைகளும், உணவுகளை சூடுபடுத்தி பயன்படுத்த தேவையான ஓவென்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “விண்வெளி பயணத்தின்போது வீரர்களுக்கான உணவு வகைகள் டிஆர்டிஓ.வில் தயாரிக்கப்பட உள்ளது. விண்வெளியில் நமது வீரர்கள் 7 நாள் தங்கியிருப்பார்கள்’’ என்றார்.