பஞ்சாப்பில் இன்று காலை நடந்த ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் காலமானார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபயணம் செய்த பிறகு கடந்த 10ஆம் தேதி ராகுல் காந்தி பஞ்சாப்பை சென்றடைந்தார்.
அவரது நடைபயணத்தின் போது சோனியா காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் உடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். பஞ்சாப் யாத்திரையின் போது குளிரையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் அவருடன் சென்று உற்சாகப்படுத்தி வந்தனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2023/01/1092885-rahul-gandhi.jpg)
அதன்படி பஞ்சாப்பில் ஜலந்தர் அருகே உள்ள பிலாப்பூர் பகுதியில் ராகுல் காந்தி இன்று காலை நடைபயணத்தை தொடங்கியபோது அவருடன் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார். நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரடைப்பில் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் மறைவை தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைபயணம் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை பிற்பகல் ஜலந்தர் அருகே இருந்து நடைபயணம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.