கோவை உக்கடம் அல் அமீன் காலணி பகுதியில் சுமார் ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த இருவரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் உதயம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் 28 ஆம் தேதி அங்கு ஆய்வு மேற்கொண்ட கேரள போலீசார், கோவையை சேர்ந்த பிரியன்லால் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் நேற்று இரவு கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கோவை உக்கடம் அல் அமீன் காலனியில் உள்ள அஸ்ரப் அலி (21) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் ரூ.8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப் கொடுத்த தகவல் அடிப்படையில் கரும்புகடையை சேர்ந்த சையது சுல்தான் (32) என்பவரது வீட்டில் கேரள போலீசார் சோதனையிட்டபோது அங்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான, வெறும் 2 ஆயிரம் நோட்டு கட்டுகளுடன் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சையத் சுல்தான், அஸ்ரப் இருவரையும் கைது செய்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் கேரளா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றார்.