கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே நாசீக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சொந்த மாநில மக்களிடம் ஆசி பெறுவதற்காக மக்கள் ஆசி யாத்திரையை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசுகையில்,
நாம் எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. அதை கூட பாதுகாவலர்களிடம் கேட்கிறார்.
நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும், மும்பையில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்தை சிவசேனா கட்சித் தொண்டர்கள் சூறையாடினர்.
இதனிடையே, நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் மீது நாசீக் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை ரத்தினகிரி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். 20 ஆண்டுகளில் கைது செய்யப்படும் முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஆவார்.
இதற்கு முன்னர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது மாநில போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.