புதுடெல்லி
தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.
தாதாசாகெப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.
இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது
திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது.
2019-ம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறவுள்ளார்.
இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைப்போல அன்றைய தேதியில் 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இதில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, ‘மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம்’ என்ற படத்துக்கு வழங்கப்படுகிறது.
அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் பெறுகிறார்கள்
அதுபோன்று கண்ணான கண்ணே… பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், நடிகர் ஆர்.பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், ‘கேடி (எ) கருப்பு துரை’ என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறுகிறார்கள்.