தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈபிஎஸ் குடலிறக்க பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து உடல்நிலை சரியான நிலையில் அரசியல் களத்திற்கு மீண்டும் திரும்பினார்.
இந்நிலையில், பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை 6.30 மணி அளவில், எம்.ஜி.எம் மருத்துவமனையில் சூட் நம்பர் 11 அறையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பரிசோதனை முடிந்த பிறகு இன்று பிற்பகல் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே நேற்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.