பெங்களூரு:-
ஆன்லைன் வர்தகத்தின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் அமேசான் ஸ்விகி, ஸோமாட்டோ ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு போட்டியாக உணவு டெலிவரி சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக அமேசான் நிறுவனம் தனது ஆன்லைன் உணவு டெலிவெரி சேவையை பெங்களூருவில் தொடங்கியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அமேசான் இந்தியா செய்தி தொடர்பாளர்:-
அமேசானில் மற்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது போலவே உணவுகளையும் வாங்க விரும்புவதாக சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இச்சூழலில் உணவு டெலிவரி மிக முக்கியமாக இருக்கிறது. உள்ளூர் உணவகத் தொழில்களுக்கு தேவையான உதவி பற்றியும் நாங்கள் அறிவோம்.
பெங்களூருவில் சில பகுதிகளில் மட்டும் அமேசான் ஃபுட் அறிமுகப்படுத்தப்படும். எங்களது தூய்மை தரநிலைச் சான்றுகளை பூர்த்தி செய்யும் உள்ளூர் உணவகங்கள், கிளவுட் கிட்சன்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி உயர்நிலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
பெங்களூருவில் மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, வைட்ஃபீல்ட், பெல்லந்தூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் சுமார் 100 உணவகங்களில் அமேசான் ஃபுட் சேவை தொடங்கப்படுகிறது. பாக்ஸ்8, சாய் பாய்ண்ட், ஃபாசோஸ், மேட் ஓவர் டோனட்ஸ் , ரேடிசன், மேரியாட் உள்ளிட்ட உணவகங்கள் இதில் அடங்கும். அமேசான் ஆப்பிலேயே உணவுகளை ஆர்டர் செய்துகொள்ளலாம். ஆனால் இந்த நான்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அமேசான் ஆப்பில் உணவு டெலிவரிக்கான ஆப்ஷன் இருக்கும்.
ஸோமாட்டோ நிறுவனம் தனது ஊழியர்களில் 13 விழுக்காட்டினரையும், ஸ்விகி நிறுவனம் 1100 ஊழியர்களை வெளியேற்ற உள்ளது. இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் புதிய திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.