பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கியது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் செய்து, அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கடந்த 9 ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முதல் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் என நாடெங்கும் இம்ரான்கான் கட்சியினர் வன்முறை போராட்டங்களில் இறங்கினர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. போலீஸ் நிலையங்களும் தாக்கப்பட்டன. இதற்கிடையே இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதற்கு எதிராக இம்ரான்கான் சார்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி உமர் அத்தா பந்தியல், நீதிபதி முகமது அலி மஜார், அத்தர் மினல்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டு வளாத்தில் வைத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள் இம்ரான்கான் கைது சட்டவிரோதம்” என கூறினர். மேலும் அவரை ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான்கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இம்ரான்கான் போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார், அவர் கைதியாக கருதப்பட மாட்டார், அவரது பாதுகாப்பை இஸ்லாமாபாத் போலீஸ் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.