மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 44 வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு மற்றும் விவாசியிகளுக்கு இடையே 8 ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என தலைமை நீதிபதி பாப்டே அதிருப்தி தெரிவித்தார்.
போராட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நேரிடும் நிலையில், அங்கே என்ன நடக்கிறது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார். மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்றும் கூறினார். இல்லையெனில், நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று தலைமை நிதிபதி பாப்டே எச்சரித்தார்.
#centralgovt #modi #farmeract #farmer #delhiprotest #supremecourt #tamilthisai