டெல்லி:-
ஜூன் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு தகவல் வெளியானது. தற்போது இதன் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து 5வது முறையாக தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.
அதே நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊரடங்கிற்கு ‘Unlock 1.0’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் போடப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. மால்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளது.
உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் மீண்டும் ஓட அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் பல தளர்வுகள் அமலுக்கு வரும்.
அதே நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் தொடக்கத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல், மீண்டும் நாடு தழுவிய முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இதற்கு அதிகாரப்பூர்வ மறுப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு தரப்பு. மத்திய அரசின் ஊடகச் செய்திப் பிரிவு PIB Fact Check (Press Information Bureau) இந்த தகவல் போலியானது என்று தெரிவித்துள்ளது.
விஷமிகள் சிலர் வேண்டுமென்றே ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படம் அதை மாற்றி வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.