சேலம்:-
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.
சேலம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.441 கோடி செலவில் ஈரடுக்கு மேம்பாலத்தைக் கட்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, இந்த புதிய பாலம் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை பாலம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 7.8 கிலோமீட்டர் நீள தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஈரடுக்கு மேம்பாலத்தின் ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தைத் தாங்க 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிநவீன சிசிடிவி கேமரா, இரவிலும் பகலைப் போல் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குரங்கச்சாவடியில் இருந்து ஐந்து ரோடு வரை 15 தூண்கள், ஐந்து ரோட்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 32 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ரெசிகாஸ் ரெஸ்டாரண்ட் வரை 38 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டு இறங்கு தளத்தக்கு 10 தூண்கள், ஏ.வி.ஆர். சந்திப்பில் இருந்து ஐந்து ரோடு வரை எட்டு தூண்கள், ஐந்து ரோடு முதல் அழகாபுரம் வரை 31 தூண்கள், அழகாபுரம் முதல் ராமகிருஷ்ணா பிரிவு வரை 39 தூண்கள் என மொத்தம் 173 தூண்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த புதிய பாலத்தை இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைத்து கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி:-
சேலம் மக்களின் நீண்ட கால திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பாலம் திட்டங்கள் அனைத்தும் நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது சேலம் மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகள். அதை அப்படியே நான் இதய தெய்வம் அம்மா அவர்களிடம் கொடுத்தேன். அதை பார்த்துவிட்டு இவ்வளவு தான் பாலமா, இன்னும் இருக்கிறதா எனக் கேட்டார். சேலம் மாநகரம் வளர்ந்துவரும் நகரம். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறினேன். உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்தப் பாலம் திறக்கப்பட்டிருப்பதால் இனி சேலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். இரண்டடுக்கு மேம்பாலத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரும் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்துக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரும் சூட்டப்படுகிறது. தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம்’ என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழகத்திலேயே சேலத்தில் மட்டும்தான் இவ்வளவு நீளமான ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.