சென்னை:-
மகாராஷ்டிரா, ம.பி. உள்ளிட்ட வடமாநிலங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்து மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை அமல்படுத்தியதில் இருந்து, அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு காலத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டி உள்ளது.
கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை, தற்போதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் லடாக் யூனியன் பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலர்கள் என்று கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டபோது, இந்தியாவில் 66 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு பேரல் 70 டாலர்கள் என்று வீழ்ச்சி அடைந்திருக்கும் சூழலில், நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. மத்திய அரசு கலால் வரியை உயர்த்துவதால், கச்சா எண்ணெய் விலை குறைவதன் பலன்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி 307 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, தவிர மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு சாமானியர்களை கதிகலங்க வைத்துள்ளது.