டெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ரவுடி உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு டெல்லியில் ரோகிணியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று, அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகியை விசாரணைக்கு ஆஜர்படுத்த அழைத்து வந்திருந்தனர்.
பல்வேறு தரப்பினர் வழக்கு விசாரணைக்காக வந்திருந்த வேளையில், அறை எண் 207 அருகில் வழக்கறிஞர் உடையில் வந்திருந்த ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள், மற்றொரு ரவுடி கும்பல் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இரு கும்பலுக்குமிடையே நடந்த மோதலைத் தடுப்பதற்காக நீதிமன்ற வளாகத்திலிருந்த போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அங்கு சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் பலியானார்கள். தாதா ஜிதேந்தர் கோகி கடந்த ஒருவருடமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பட்டப்பகலில் பலத்த பாதுகாப்புக்கிடையே நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்