பதுதில்லி:
மனைவியின் அனுமதியின்றி கணவன் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டால், அதனை விவாகரத்துக் கோருவதற்கான ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கணவர், மனைவியின் பெற்றோர் அளித்திட்ட தங்க நகைகள் மற்றும்ஆபரணங்களை சொந்தத் தேவைக்கு கையாடல் செய்தது மட்டுமல்லாமல், மனைவியின் பெற்றோரிடம் தொடர்ந்து பணம் 77 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கோரியிருந்ததும் மேலும் தன்னுடைய வர்த்தகத்தில் ஏற்பட்ட கடன்களுக்காக இவ்வாறு பணம் தேவைப்பட்டதாக கணவர் கூறியிருக்கிறார்.
மேலும் கணவர், மனைவியிடம் பல தடவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கும், பல்வேறு பாலியல் வக்கிர நடவடிக்கைகளுக்கும் கட்டாயப்படுத்தியும் இருக்கிறார். தன்னுடைய மனைவி வேறு சில ஆண்களுடன் தொடர்புகள் வைத்திருந்ததாகவும் பொய்ப் புகார்கள் கூறியிருக்கிறார்.
இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் விவாகரத்து மனுவை அனுமதித்திருக்கிறது. கணவர் கோரிய மண வாழ்க்கை உரிமைகளை அளிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
இவ்வழக்கில், மனைவியின் உடல், தனக்கே சொந்தம் எனக் கணவன் நம்புவதன் காரணமாகவே மணவாழ்க்கையில் பாலியல் வன்புணர்வு நடக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெண்ணுக்கு என்று தனிப்பட்ட உடல் இல்லை என்று கணவன் கருதுவதாகவும் பெண்ணின் உடல் ஒரு பண்டம் என்கிற பழைய ஆங்கில சட்டம்இந்திய நாட்டில் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கேரள உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இன்றைய சமூகத்தில் திருமணங்களில் கணவன்-மனைவி ஆகிய இருவருமே சமமான அந்தஸ்து உடையவர்களே என்றும் கணவன், மனைவியைவிட உயர்ந்த நிலையில் உரிமை படைத்தவன் என்று சொந்தம் கொண்டாடக்கூடாது என்றும் மிகச் சரியாகவே முடிவிற்கு உயர்நீதிமன்றம் வந்திருக்கிறது.
உடல்ரீதியாக ஒரு தனிநபரின் தனிப்பட்டசுயாட்சியை மீறும் செயல் எதுவாக இருந்தாலும் அல்லது எவ்விதமான அவமதிப்பினை ஏற்படுத்தினாலும் அது தனிநபரின் சுயாட்சியை மீறும் செயலாகும் என்றும் உயர்நீதிமன்றம் முடிவிற்கு வந்திருக்கிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணவன், மனைவியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டால் அது இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்ற போதிலும், அது பெண்ணின் மீதான வன்கொடுமை என்றும்,அதன் அடிப்படையில் விவாகரத்து கோரலாம் என்றும் நீதிமன்றம் முடிவுக்கு வரமுடியும் என்றும் கூறியிருக்கிறது.
நாட்டிலுள்ள உரிமையியல் சட்டம் ஒருபெண்ணின் மீது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கட்டாயப் பாலியல் வன்புணர்வு உட்பட வன்கொடுமையைப் பிரயோகித்தால் அது வன்கொடுமையின்கீழ் வரும் என்று அங்கீகரித்திருப்பதுடன், விவாகரத்திற்கு இதை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் கேரளா உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
குடும்ப வன்முறைச் சட்டம், ஆடவரின் உடல்ரீதியான, பாலியல் ரீதியான, இழி வார்த்தைகள் மூலமாக,உணர்வுப்பூர்வமாக மற்றும் பொருளாதாரரீதியாகத் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை வன்முறை என்ற அடிப்படையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண் பல்வேறு உரிமையியல் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாட முடியும் என்று கேரளா உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.