நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் ஏவுகணையை தயாரித்துள்ளது.
இந்த அதிநவீன ஏவுகணை எந்த காலநிலைகளிலும் இலக்கை மிகத் துல்லியமாக இடைமறித்து தகர்க்கும் திறன் உடையது. மலைப் பிரதேசங்களிலும் இலக்கை துல்லியமாக தகர்க்கும் திறனுடன், இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இலக்காக நிர்ணயிக்கப்பட்ட, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறியவகை விமானத்தை வானில் இடைமறித்து துல்லியமாக தகர்த்தது.
இதையடுத்து, ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.