பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது. 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய கொரோன வைரசால் பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தியது மதியமைச்சகம். இந்தத் தடை அனைத்து வகையான விமானங்களுக்கும் பொருந்தும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (22/12/2020) இரவு வரை, இந்தியா வரும் இங்கிலாந்து பயணிகளுக்குக் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பிரிட்டனில் இருந்து நவம்பர் 25- ஆம் தேதி முதல் டிசம்பர் 23- ஆம் தேதி வரை, இந்தியா வந்தவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிரிட்டனில் இருந்துவந்த பயணிகளின் சளி மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கொரோனா பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவுவந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனா உறுதியானால் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.