குலு:-
முதல்வர் முன்னிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் முதல்வரின் பாதுகாவலர்கள் ஒருவரை ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் இணையத்தில் வைராகி வருகிறது.
மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை வரவேற்க ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெயராம் தாக்கூர் குலு-மனாலி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், நான்கு வழி சாலை நிலமளித்த மக்கள் உரிய இழப்பீடு கோரி விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். அவர்களை கண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களிடம் சென்று குறைகளை கேட்டதோடு, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே திடீரென பாதுகாப்பு வாகனங்கள் நின்று தொடர்பாக குலு காவல்துறை கண்காணிப்பாளர் கவ்ரவ் சிங்கிற்கும், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான கூடுதல் எஸ்.பி, பிரிஜேஷ் சூட்டிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் குலு எஸ்பி முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பிரிஜேஷ் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதைக்கண்ட முதல்வரின் மற்றொரு பாதுகாப்பு அதிகாரியான பல்வந்த் சிங் குலு எஸ்பி கவ்ரவ் சிங்கை காலால் உதைத்தார். இதையடுத்து மற்ற அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குலு எஸ்பி கௌரவ் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான கூடுதல் எஸ்.பி., பிரிஜேஷ் சூட் மற்றும் முதலமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பல்வந்த் சிங் ஆகியோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டிஜிபி சஞ்சீவ் குண்டு உத்தரவிட்டுள்ளார்.