விமானம் தாங்கிய கப்பலான ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ போர்க்கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்போதுள்ள கப்பல்களை விட 7 மடங்கு பெரியதான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கிய போர்க்கப்பல் கட்டுவதற்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடிந்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடந்து வந்தது.
4 கட்டங்களாக நடந்து வந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் இன்று முறைப்படி படையில் சேர்க்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விமானந்தாங்கி போர்க்கப்பலுக்கான கட்டுமான செலவு ரூ.19,341 கோடி ஆகும். மேலும் இந்த கப்பலில் பெண் அதிகாரிகள், பெண் அக்னிவீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்பட 2,200 அறைகள் உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள் என 1,700-க்கு மேற்பட்டோர் இந்த கப்பலில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.