மதுரை
சர்வதேச அளவில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களைப் படிக்க பல்வேறு நவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் முன் உள்ள நபர்களை அறிந்து கொள்ளவும் அரவிந்த் கண் மருத்துவமனையும், பெங்களூருவில் உள்ள எஸ்எச்ஜி டெக்னாலஜியும் இணைந்து ஸ்மார்ட் விஷன் கண்ணாடி (smart vision spectacles) புதிதாக வடிவமைத்துள்ளது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஸ்மார்ட் விஷன் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இக்கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை சவால் கொண்டவர்கள் தங்கள் முன் உள்ள நபர்களையும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவும், எளிதாக படிக்கவும் இந்தக் கண்ணாடி உதவும் என்றும் இந்தியாவிலேயே முதல்முறையாக இவ்வகை கண்ணாடி அறிமுகம் செய்துள்ளோம் என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை பார்வை சேவை பிரிவு தலைமை மருத்துவர் பி.விஜயலெட்சுமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இக்கண்ணாடியை சாதாரண கண் கண்ணாடி போல் பார்வையற்றவர்கள் முகத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். ப்ளாஷ் ஒளியுடன் கூடிய கேமரா மூலம் சுற்றுப்புறத்தில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதை அறிந்தகொள்ளலாம்.
நடப்பதற்கும் இந்த சாதனத்தை உதவியாகப் பயன்படுத்தலாம். அது எந்தத் தடையாக இருந்தாலும், மனித உருவங்கள், பொருட்கள் போன்றவை முகத்திற்கு 2 மீட்டர் தூரம் வரை தெரிந்து கொள்ளலாம்.
முன் அமர்ந்து இருக்கும் நபரை ஒரு முறை இந்த சாதனம் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அடுத்த முறை அவரது பெயர் உள்ளிட்ட விவரத்தை நமக்கு இந்த கருவி அவர் வந்தவுடன் தெரிவிக்கும்.
ப்ளாஷ் ஒளி இருப்பதால் இரவில் கூட இந்த சாதனத்தைப் பயன்படுத்தி பகலைப்போல் படிக்கலாம். கண்ணாடி பிரேமின் இடது பக்கத்தில் இணைக்கப்பட்ட பொத்தான்களை அழுத்துவதன் மூலம் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். இந்தக் கருவியைக் கொண்டு 73 மொழிகளைப் படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.