புது டெல்லி
கொரோனா தொற்று கடந்த 1.5 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகளவில் வளர்ந்த நாடுகள் என கூறப்படும் அமெரிக்கா, சீனா , இங்கிலாந்து, பிரான்ஸ், போன்ற நாடுகளால் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் மனித இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு அனைத்து நாடுகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின. கொரோனாதோற்றால் அதிகப்படியான மக்களை உலக வல்லரசான அமெரிக்காவே இழந்துள்ளது.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தொற்று தொடங்கியது. கொரோனா தொற்றின் முதல் அலை காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் 10 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என்ற நிலை உருவானது. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தின.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும் போதிய அளவில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அது சாதித்தியப்படுமா என்ற கேள்வி உள்ளது. இச்சூழலில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய மக்களுக்கு வழங்குவதற்கு தயாராகிவருகிறது.
சர்வதேச அளவில் ஜான்சன் & ஜான்சன் வேக்சின் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளைப் போலக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜான்சன் & ஜான்சன் வேக்சினை இரண்டு முறை கொடுக்க தேவையில்லை.
ஜான்சன் & ஜான்சன் வேக்சின் ஒரு டோஸ் அளித்தால் போதும். இதன் மூலம் குறைவான வேக்சின்களை கொண்டு, குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் செலுத்தி மக்களை கொரோனா தொற்றில் இருந்து மீட்கமுடியும் என ஒன்றிய அரசு கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.