கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தன்னுடைய நண்பரோடு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது .தலைநகர் டெல்லி மாநகரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் டிசம்பர் 17ஆம் தேதி பேருந்து ஓட்டுநர் ராம்சிங் முகேஷ் சர்மா பவன் குப்தா ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப் பட்டனர் .
இந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் .மேலும் அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் .இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .இந்த வழக்கு தொடர்பாக ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2013 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி டெல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம் சிங் டெல்லியில் உள்ள திகார் சிறையில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார் .
மேலும் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அச் சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான் .இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வினை ,முகேஷ் ,அக்ஷய் ,பவன் இவர்கள் நான்கு பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மரண தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் வருகிற 22-ஆம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.